தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை, செரியன் நகர், 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கவியரசன். இவரது 17 வயது மகன், புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவன், நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் வெளியே படுத்து தூங்கியுள்ளான். இந்நிலையில், நள்ளிரவில் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அப்போது, அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பியோடி உள்ளனர். வீட்டின் வெளியில் தூங்கிய சிறுவன் தலை, முகம் என ஐந்து இடங்களில் கத்தியால் வெட்டுப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்தான். உடனே அவனை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்த புகாரின் பேரில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.